24 மணிநேரமும் கடைகள் திறக்க அனுமதி நீட்டிப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24 மணிநேரமும் திறக்க, கடந்த 2019 ஜூனில் தமிழக அரசு அனுமதி அளித்தது.
24 மணிநேரமும் கடைகள் திறக்க அனுமதி நீட்டிப்பு: தமிழக அரசு
1 min read

10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைப் பணியமர்த்தியுள்ள கடைகளும், வணிக நிறுவனங்களும் வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணிநேரமும் இயங்கும் வகையில் அளிக்கப்பட்ட அனுமதியை, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24 மணிநேரமும் திறக்க கடந்த 2019 ஜூனில் தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆறு மாதத்திற்குப் பிறகு கரோனா தொற்று காரணமாக கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

2019 அரசாணையின்படி 24 மணிநேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்ட 3 ஆண்டு காலம் 2022-ல் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, இந்த அனுமதி மேலும் 3 ஆண்டுகளுக்கு, ஜூன் 4, 2022 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இன்று (மே 9) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,

`மே 5 அன்று 42-வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர், `பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணிநேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜூன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்’ என அறிவித்தார்.

தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கு இணங்க, பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு, ஜூன் 5 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால், அரசாணை (எண்.207) வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வணிகர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in