
சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவைத் தனியாகச் சந்தித்துப் பேசியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று, சட்டப்பேரவை தொடங்கும் முன்பு சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய செய்தியாளர் சந்திப்பில், செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தன்னைச் சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்ப்பது ஏன் என்கிற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி கூறுகையில், என்னைச் சந்திப்பதை செங்கோட்டையன் ஏன் தவிர்க்கிறார் என்று அவரிடமே கேளுங்கள். அவரிடம் கேட்டால் தான் காரணம் தெரியும். என்னைக் கேட்டால் எப்படித் தெரியும்? இங்கே நிறைய பேர் வரவில்லை. அதைப் பற்றி நீங்கள் கேட்கவில்லை. நான் என்றைக்கும் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. அதிமுக சுதந்திரமாக செயல்படுகிற கட்சி. இங்கே யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று கூறினார்.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவுவைத் தனியாகச் சந்தித்துப் பேசியது குறித்து செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
சபாநாயகரைச் சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது வழக்கம். இன்றுகூட அதிமுகவின் ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரைச் சந்தித்தோம். எனது தொகுதியில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொடுக்கச் சென்றேன். சபாநாயகர் அறையில் இருந்த சுற்றுச்சூழல் அமைச்சரிடமும் கடிதம் கொடுத்தேன் என்று சொல்லிவிட்டு உடனடியாக அந்த இடத்திலிருந்து கிளம்பிவிட்டார்.