நடிகை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு

காவல் துறையினரைத் தடுத்து நிறுத்திய காவலாளி மீது துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் காவலர்களைத் தாக்கியதாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நடிகை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு
1 min read

நடிகை வழக்கில் 12 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக கடந்த 2011-ல் நடிகை ஒருவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதியப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடரப்பட்டது. 2011-ல் அளிக்கப்பட்ட புகாரை நடிகை 2012-ல் திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறி கடிதம் கொடுத்துள்ளதாகவும் இதன் அடிப்படையில் வழக்கை காவல் துறை முடித்து வைத்ததாகவும் சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்புடைய விசாரணை நிறைவடைந்த நிலையில், சீமான் மீது நடிகை அளித்த புகாரை ரத்து செய்ய முடியாது என்றும், வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்குள் நடத்தி முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 17-ல் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்குப் பட்டியலிடப்படவுள்ளது.

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து வளசரவாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு சீமான் ஆஜராகாத நிலையில், நீலாங்கரையிலுள்ள சீமானின் இல்லத்தில் வளசரவாக்கம் காவல் துறையினர் அழைப்பாணையை ஒட்டியுள்ளார்கள். அதில், நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல் துறை குறிப்பிடப்பட்டிருந்ததாகச் செய்திகள் வருகின்றன.

எனினும், காவல் துறையினர் ஒட்டிய அழைப்பாணை சிறிது நேரத்திலேயே கிழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அழைப்பாணை கிழிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிய காவல் துறையினர் முயற்சித்திருக்கிறார்கள். அப்போது, சீமான் வீட்டுக் காவலாளி ஒருவர் காவல் துறையினரைத் தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்தார்கள். மேலும், அழைப்பாணையைக் கிழித்தவரையும் காவல் துறையினர் கைது செய்தார்கள்.

காவல் துறையினரைத் தடுத்து நிறுத்திய காவலாளி மீது துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் காவலர்களைத் தாக்கியதாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in