
விழுப்புரத்தின் மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோயில் திறக்கப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் வழிபாடு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இதற்குள் சென்று, வழிபாடு மேற்கொள்வது தொடர்பாக பட்டியலின மற்றும் வேறொரு சமுதாய மக்களுக்கு இடையே கடந்த 2023-ல் மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக, 7 ஜூன் 2023-ல் கோயிலைப் பூட்டி வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். அத்துடன் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திரௌபதி அம்மன் திருக்கோயிலை மீண்டும் திறந்து பொது வழிபாட்டுக்கு அனுமதிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திரௌபதி அம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்களை அனுமதிக்காமல் ஒரு காலப் பூஜையை மட்டும் நடத்த விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன்பிறகு, 22 மார்ச் 2024-ல் கோயில் திறக்கப்பட்டு, ஒரு காலப் பூஜை மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், 145 தடை உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம், அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம் என்று அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற இரு சமுதாயங்களின் பிரதிநிதிகளும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நடந்துகொள்வதாகவும, வழிபாடு மேற்கொள்வது தொடர்பாக பிரச்னை செய்யப்போவதில்லை என்றும் உறுதியளித்தனர்.
இதன்படி, இன்று (ஏப்.17) காலை மேல்பாதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலுக்குள் திறக்கப்பட்டு, பொதுமக்கள் உள்ளே சென்று வழிபாடு நடத்த அனுமதியளிக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மேற்பட்ட மக்கள், கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.