
எம்புரான் படத்தில் இடம்பெற்றிருந்த முல்லை பெரியாறு அணை தொடர்புடைய சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரது நடிப்பில், பிரித்விராஜ் இயக்கிய எம்புரான் படம் கடந்த 27 அன்று வெளியானது. இந்த படத்தில் 2002 குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், நாட்டின் விசாரணை அமைப்புகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத் தொடர்ந்து, எம்புரான் படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல், சமூகக் காட்சிகள் பல ரசிகர்களின் மனதைப் புண்படுத்தியிருப்பதால் அவை நீக்கப்படும் என்று அறிவித்த மோகன்லால், அதற்காக மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டார்.
அதன்பிறகு, எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை தொடர்புடைய சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள அணை தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கோரிக்கை முன்வைத்தார்கள்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை தமிழக சட்டப்பேரவையில் எழுப்பினார் தவாக எம்.எல்.ஏ. வேல்முருகன். அதற்குப் பதிலளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், `நான் அந்த படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவர்கள் சொன்னதைக் கேட்டபோது, பயமும் கோபமும் எழுந்தது. ஆனால் இப்படிப்பட்ட ஒன்றைச் செய்திருந்தால் அது தேவையற்ற ஒன்று. இதனால் வேறொரு மாநிலத்தில் பிரச்னை கிளம்ப வாய்ப்புள்ளது’ என்றார்.
இதைத் தொடர்ந்து, இது குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், `தணிக்கை வாரியத்தால் அந்த காட்சிகள் நீக்கப்படவில்லை. ஆனால் படம் வெளியான பிறகுதான் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உடனடியாக அந்தக் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன’ என்றார்.