வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
2006 - 2011 திமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக 2011-ல் அதிமுக ஆட்சியின்போது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.72 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை 2016-ல் விடுவித்தது.
2017-ல் லஞ்ச ஒழிப்புத் துறை இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கின் விசாரணையைக் கடந்த நவம்பர் 27-ல் நிறைவு செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை ஒத்திவைத்தார். டிசம்பர் 19-ல் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்தார். தொடர்ந்து, டிசம்பர் 21-ல் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணைக்காக இருவரது சிறைத் தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, பொன்முடிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதியும் காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.