வாக்கு சதவீதத்தில் மாற்றம் இருந்தது ஏன்?: சத்யபிரதா சாகு விளக்கம்

தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று தரவுகளை வெளியிட்டது.
சத்யபிரதா சாஹூ
சத்யபிரதா சாஹூ ANI
1 min read

மக்களவைத் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களில் ஒரு சிலர் மட்டுமே செயலியில் தரவுகளைப் பதிவேற்றம் செய்ததால் குழப்பம் ஏற்பட்டதாக தமிழ்நாட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, நள்ளிரவு 12 மணியளவில் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு தரவை வெளியிட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 69.46% வாக்குகள் பதிவானதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. வாக்கு சதவீதத்தில் மாற்றம் இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

வாக்குப்பதிவு நிறைவடைந்து இரு நாள்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று தரவுகளை வெளியிட்டது.

இந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சத்யபிரதா சாஹூ விளக்கமளித்துள்ளார்.

தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து தகவல்கள் வர நேரம் எடுக்கும் என்பதால், செயலி மூலமாகத் தகவல்களைப் பெற்றோம். ஆனால், செயலி மூலம் தரவுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே செயலி மூலம் தரவுகளைப் பதிவேற்றம் செய்து அனுப்பினார்கள். செயலியில் கிடைத்த தரவுகளைக் கொண்டு கணக்கிட்டதன் காரணமாக வாக்குப்பதிவு சதவீதத்தில் மாற்றம் ஏற்பட்டதாக அவர் விளக்கம் தந்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in