மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க சரத்குமாருக்கு அதிகாரம் வழங்க, சமத்துவ மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக மார்ச் 6-ல் சரத்குமார் அறிவித்தார்.
தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக சரத்குமார் அறிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் கட்சியை பாஜகவுடன் இணைத்துக்கொண்டார்.
சமகவை பாஜகவில் இணைப்பது குறித்து சரத்குமார் பேசியதாவது:
"கூட்டணியும், தொகுதிப் பங்கீடும்தான் அரசியலாக உள்ளது. மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கை இதில் அடிபடுகிறதே என்ற எண்ணம் இரவு நேரத்தில் மனதைத் தாக்கிக் கொண்டிருந்தது. நாமும் இந்தப் பாதையில்தான் செல்ல வேண்டுமா, ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது எத்தனை இடங்கள், என்ன கோரிக்கை என்று மட்டுமே சென்றுகொண்டிருக்கிறது.
நம் வலிமையை, ஒரு வலிமையான தலைவரான மோடிக்கு அர்ப்பணித்து, அவருடன் சேர்ந்து செயல்பட்டால் என்ன என்று தோன்றியது. அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி இந்த எண்ணம் குறித்து தெரிவித்தேன். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் நான் உங்களுடன் உறுதுணையாக இருப்பேன் என்று மனைவி தெரிவித்தார்.
இந்த முடிவு குறித்து தெரிவித்து இது சாத்தியமா என்று நிர்வாகிகளிடம் இரவில் பேசினேன். அவர்கள் சாத்தியம்தான் என்றார்கள். இயக்கத்தின் சகோதரர்கள் நிச்சயமாக என் கருத்தை வலுப்படுத்துவார்கள், நான் சொன்னதைக் கேட்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
மக்கள் பணியை நாம் தொடர்கிறேன். இந்தப் பயணம் சமத்துவ மக்கள் கட்சியின் முடிவல்ல. மக்களுக்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சி. இது எழுச்சியின் தொடக்கம்" என்றார்.