

விஜயின் படத்திற்கு ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இதுபோன்று நடந்தபோது அவர் கைகட்டிக்கொண்டு தானே நின்றார் என்று நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை ஜனவரி 21 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தக் லைஃப் படத்திற்கும் தணிக்கை பிரச்னை நடந்தது என்று தணிக்கை வரியத்திற்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.
விஜய் கைக்கட்டிக்கொண்டு நின்றார்
கோவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுடன் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“தணிக்கை வாரியம் இப்போதுதான் படத்தை நிறுத்துகிறதா? அவர்கள் எத்தனையோ படங்களை நிறுத்தியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னை தக் லைஃப் படத்திற்கும் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடித்த படத்திற்கே இந்தப் பிரச்னை வந்தபோது ஜெயலலிதாவைப் பார்க்கப் போனாரே. அப்போது என்ன செய்தார் கைகளைக் கட்டிக்கொண்டு சாலையில் தானே நின்றார். ஆக இதெல்லாம் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுவது அல்ல. எல்லாவற்றையும் நீங்கள் அரசியலாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது. இப்படிப்பட்ட எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டு்ம்.
தணிக்கை வாரியத்தில் அரசியலா?
தணிக்கை வாரியத்தில் என்ன அரசியல் இருக்கிறது? ஒரு படத்தில் அவர்கள் திருத்தம் செய்யப் பரிந்துரைக்கிறார்கள் என்றால் அதில் ஏதோ சரியாக இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். திரைத்துறையிலிருந்து பிரதிநிதிகளாக அங்கே பொறுப்பில் அமர்கிறார்கள். அங்கே எந்த அரசியல்வாதியும் இல்லை. நாடு முழுவதிலுமிருந்து திரைத்துறையின் பிரதிநிதிகள்தான் தணிக்கை வாரியத்தில் இருக்கிறார்கள்.
அரசைக் குற்றம்சாட்டுவது சரியல்ல
ஜனநாயகன் படம் வெளியாக வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருக்கும். எனக்கும் இருக்கிறது. படம் எடுப்பது கடினமான காரியம்தான் ஆனால் அது சட்டங்களுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும். ஆனால் சான்றிதழ் வரவில்லை என்றால் உடனே அதற்கு அரசுதான் காரணம் என்று குற்றம்சாட்டுவது சரியானது அல்ல” என்றார்.
Actor Sarath Kumar has said that when censor issue happened to Vijay's film during Jayalalithaa's rule, he stood ground with folded hands.