தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு | Sanitation Workers | Chennai

தனியார்மயமாக்கலால் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களின் மாத ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு | Sanitation Workers | Chennai
1 min read

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13-வது நாளாக சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் கடந்த ஆக. 1 முதல் குப்பைகளை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மண்டலங்களில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களின் மாத ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு பந்தல் அமைத்து கடந்த ஆகஸ்ட் 1 முதல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தூய்மைப் பணியாளர்களுடன் தமிழக அரசு மேற்கொண்ட பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான முதன்மை அமர்வு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்திவரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in