சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர்: அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி

அவர் இந்த இயக்கத்துடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாத ஒரு நபர், அப்படிச் சொல்லும்போது இந்த இயக்கத்திற்காக உண்மையாக உழைக்கும் உழைப்பாளிக்குக் கடுமையாக கோபம் வரும்.
சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர்: அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி
1 min read

சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர் என்றும், அவர் அதிமுகவுடன் தொடர்பு இல்லாத நபர் என்றும் அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனஹள்ளி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி. முனுசாமி விமர்சித்துள்ளார்.

பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒற்றுமைப்படுத்தி, பாஜகவுடன் பலமான கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கவேண்டும் என்று அண்மையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி கருத்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி அவருக்குக் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் கே.பி. முனுசாமி இன்று (ஏப்ரல் 5) கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சைதை துரைசாமி தெரிவித்த கருத்துக்கு அதிமுகவில் எதிர்ப்பு வலுத்துள்ளதாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது,

`சைதை துரைசாமியின் கருத்துகளுக்கு எதிர்ப்பு வலுப்பதற்கான காரணம், அவரை எதிர்ப்பவர்கள் களத்தில் இருப்பவர்கள். இந்த இயக்கத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்கள். அவர்களின் உடல் பொருள் ஆவி உழைப்பு வியர்வையை சிந்தி இந்த இயக்கத்திற்காக உழைக்கின்றார்கள்.

ஏதோ ஒரு காலத்தில் இந்த பதவிகளை எல்லாம் அனுபவித்துவிட்டு வேலை வெட்டி இல்லாமல் எங்காவது ஒரு இடத்திலே இருந்துகொண்டு, அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களுடன் தொடர்பு உண்டு. அந்த தொடர்பின் வாயிலாக யாரையாவது திருப்திப்படுத்துவதற்காக இது போன்ற கருத்துகளை அவர் கூறுகிறார்.

அவர் இந்த இயக்கத்துடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாத ஒரு நபர், அப்படிச் சொல்லும்போது இந்த இயக்கத்திற்காக உண்மையாக உழைக்கும் உழைப்பாளிக்குக் கடுமையாக கோபம் வரும். அவருக்கான எதிர்ப்பு அதிகமாக வலுத்துக்கொண்டிருப்பதுதான் அந்த கோபத்தின் வெளிப்பாடு.

தேவையில்லாமல் கட்சியில் ஏதாவது ஒரு குழப்பதை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லி பிரச்னையை இன்னும் ஊதிப் பெரிதாக்குகிறார்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in