திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் மொத்தம் 9 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், 7 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்தது. திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறைக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தார்கள்.
இன்று மாலைக்குள் மீதமுள்ள இரு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
இந்த நிலையில், 6-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் வெறும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ராமச்சந்திரா சௌதரி, ராஜ்சமண்ட் தொகுதியில் சுதர்சன் ராவத், பில்வாராவில் தாமோதர் குர்ஜார், கோடாவில் பிரஹலாத் குஞ்ஜால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியில் வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதே தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இதே பட்டியலுடன் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இருந்தபோதிலும், மயிலாடுதுறைக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.