ஆளுநருக்கு ஒருநாள் அவகாசம்: பொன்முடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.
பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு நாளை வரை அவகாசம்
பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு நாளை வரை அவகாசம்ANI

பொன்முடிக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பது தொடர்பான வழக்கில் பதிலளிக்க ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, நாளை வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த 11-ல் நிறுத்திவைத்தது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த சிறைத் தண்டனையை மட்டுமே உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததாகத் தகவல்கள் வெளியாகின. எனினும், தீர்ப்பின் நகல் வெளியானவுடன் குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது உறுதியானது.

இதன்மூலம், பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்டது. பொன்முடி மீண்டும் அமைச்சராவதிலும் எந்த சிக்கலும் இல்லை எனக் கூறப்பட்டன.

இதைத் தொடர்ந்து, பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க பதவிப் பிரமாணம் செய்துவைக்குமாறு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். முதல்வர் கடிதம் எழுதிய மறுதினமே ஆளுநர் ஆர்.என். ரவி தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். இதனால், பொன்முடி அமைச்சராவதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இதில் பொன்முடி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது உச்ச நீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்படவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டார்.

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு தெரிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் பொன்முடிக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பது தொடர்பான வழக்கில் பதிலளிக்க ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நாளை வரை அவகாசம் கொடுத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள்:

அரசியல் சாசனத்தை ஆளுநர் பின்பற்றவில்லை எனில் மாநில அரசு என்ன செய்யும்?

பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த பின்னர் நீதிமன்ற உத்தரவை மதித்து பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பது ஏன்?

ஆளுநருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா?

ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினால், ஜனநாயக முறைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.

பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூறினால் அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆளுநர் கூற முடியும்?

இதுபோன்ற கேள்விகளை எழுப்பி ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in