எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
திடீர் மூச்சு திணறல் காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரப்பன் சென்னையில் நேற்று காலமானார்.
ஆர்.எம். வீ என்று அழைக்கப்படும் ஆர்.எம். வீரப்பன், 1926-ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வல்லத்திராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர்.
அரசியல் தலைவர்களில் முக்கியமானவரான ஆர்.எம். வீரப்பன், எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர்.
அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார். அரசியல் களத்தில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் முத்திரை பதித்தவர் ஆர்.எம். வீரப்பன்.
மறைந்த முதல்வர் எம்ஜிஆர், 1953-ல் ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நாடக மன்றம் மற்றும் ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்களுக்கு பொறுப்பாளராக ஆர்.எம். வீரப்பன் நியமிக்கப்பட்டார்.
இதன் பிறகு ஆர்.எம். வீரப்பன் 1963-ல் ‘சத்யா மூவிஸ்’ என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கினார். எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களைத் தயாரித்தார். இதைத் தொடர்ந்து ரஜினி நடித்த பல படங்களையும் தயாரித்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வீட்டில் இருந்தபடியும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திடீர் மூச்சு திணறல் காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரப்பன் சென்னையில் நேற்று காலமானார்.
இந்நிலையில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், வீரப்பனின் உடலுக்கு 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் அவருக்கு இறுதி மரியாதையை செலுத்தியுள்ளனர்.