சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சால் காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்திருப்பதால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ரெட் பிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர், நேர்காணல் ஒன்றில் பெண் காவல் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக அவர் மீது கோவை, சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் துறையினர், சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கைது செய்தார்கள். இந்த வழக்கில் இவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
தேனியில் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் இவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
மேலும், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், சவுக்கு சங்கரை நேர்காணல் எடுத்த ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று சோதனை செய்த காவல் துறையினர் ஆவணங்களையும், கேமிராக்களையும் பறிமுதல் செய்து சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் ரெட் பிக்ஸ் நிறுவனத்துக்கு உடன்பாடு இல்லை, அது ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் கருத்தும் இல்லை என்று ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவியும், ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளருமான ஜேன் ஃபெலிக்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ரெட் பிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை: