கோவை மேயராக போட்டியின்றித் தேர்வானார் திமுகவைச் சேர்ந்த ரங்கநாயகி

இதில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் ரங்கநாயகி மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்தார்
கோவை மேயராக போட்டியின்றித் தேர்வானார் திமுகவைச் சேர்ந்த ரங்கநாயகி
1 min read

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய மேயராக போட்டியின்றித் தேர்தெடுக்கப்பட்டார் திமுகவைச் சேர்ந்த 29-வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி.

கடந்த பிப்ரவரி 2022-ல் கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 96 வார்டுகளைக் கைப்பற்றியது திமுக கூட்டணி. திமுகவிலிருந்து மட்டுமே 76 உறுப்பினர்கள் தேர்வானார்கள். இதை அடுத்து நடந்த ரகசிய வாக்கெடுப்பில் திமுகவைச் சேர்ந்த 19-வது வார்டு உறுப்பினர் கல்பனா ஆனந்த் குமார் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் மேயராகப் பொறுப்பேற்றது முதல் கல்பனாவுக்கும், திமுக வார்டு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவின. மேலும் மேயர் என்ற முறையில் கல்பனாவின் செயல்பாடுகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு கோவை மேயர் மாற்றப்படுவார் என்ற தகவல் பரவியது.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 3-ல் கல்பனா ஆனந்த் குமார் தன் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். ஆகஸ்ட் 5-ல் திமுக அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடந்த கோவை மாநகராட்சி திமுக வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் கோவையின் புதிய மேயர் வேட்பாளராக 29-வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கோவை மேயர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை (ஆகஸ்ட் 6) நடந்தது. இதில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் ரங்கநாயகி மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாருமே வேட்புமனுத்தாக்கல் செய்யாததால் ரங்கநாயகி போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in