வடகிழக்குப் பருவமழை: கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! | Rain Alert | MK Stalin |

"மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்!"
வடகிழக்குப் பருவமழை: கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! | Rain Alert | MK Stalin |
படம்: https://x.com/mkstalin
2 min read

வடகிழக்குப் பருவமழையை ஒட்டி 12 மாவட்டங்களுக்குக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அக்டோபர் 21 அன்று 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22 அன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் இன்று காலை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது புயலாக வலுப்பெறுமா என்பது நாளை (அக்டோபர் 22) தான் தெரிய வரும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாவட்டங்களுக்குக் கண்காணிப்பாளர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கண்காணிப்பு அதிகாரிகள் தத்தமது மாவட்டங்களுக்கு உடனடியாகச் சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையைப் பொறுத்தவரை, 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி மண்டல அதிகாரிகள் தத்தமது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்குமாறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளதாவது:

"திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தேன்.

மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்!" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டங்கள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் விவரம்Rain Alert | Chennai Rain | Chennai Rains | Weather Report | Weather Alert | IMD Chennai | RMC Chennai | Bay of Bengal | Low Pressure | Low Pressure Area | Arabian Sea | Andaman Sea |

Rain Alert | Chennai Rain | Chennai Rains | Weather Report | Weather Alert | IMD Chennai | RMC Chennai | Bay of Bengal | Low Pressure | Low Pressure Area | Arabian Sea | Andaman Sea | MK Stalin | District Collectors |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in