தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக வரும் புகாரையடுத்து, வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள்
* அனைத்து வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்.
* அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும்.
* சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து காவல் துறையிடம் வழங்க வேண்டும்.
* ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
* ஓட்டுநர்களுக்குத் தினமும் சுவாச சோதனை செய்தபின் தான் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும்.
* பள்ளி வாகன ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவத்துடன் இருக்க வேண்டும்.
* போக்சோ சட்ட விதிகள் பற்றி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும்.
* பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் குழந்தைகளை ஒப்படைத்த பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும்.
மேலும், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்ற காவல் துறை சான்று அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி வாகனங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஏப்ரல் 5-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.