
மழலையர் பள்ளியில் திறந்துவைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகரின் கே.கே. நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஸ்ரீஇளம் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. மதுரை திருநகரைச் சேர்ந்த திவ்யா என்பவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்த பள்ளியை நடத்திவருகிறார். இங்கு கடந்த ஒரு மாதமாக கோடைகால சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இப்பள்ளியில் படித்து வந்த 4 வயது சிறுமியான ஆருத்ரா, கோடைகால சிறப்பு வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று (ஏப்.29) வழக்கம்போல பள்ளிக்கு வந்த ஆருத்ராவை காலை 11 மணியளவில் காணவில்லை என்று கூறப்படுகிறது.
பள்ளி வளாகத்தில் தேடிப் பார்த்தபோது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குழந்தை மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே இது தொடர்பாக காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மதுரை மாநகர காவல் துணை ஆணையர் அனிதா, கோட்டாட்சியர் ஷாலினி, பள்ளிக் கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது பள்ளியில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பது தெரிய வந்ததால், பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அந்த தனியார் மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று (ஏப்.20) செய்தி வெளியாகியுள்ளது.