நீட் மறுதேர்வு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு!

மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜெ. நிஷா பானு, எம். ஜோதிராமன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீட் தேர்வு மையம் - கோப்புப்படம்
நீட் தேர்வு மையம் - கோப்புப்படம்ANI
1 min read

மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக தேர்வை எழுத முடியவில்லை என்று குறிப்பிட்டு நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுமாறு தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 4 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் தங்களால் முழுமையாக தேர்வை எழுதி முடிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டு, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி, குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி, கே.கே. நகர் பத்ம ஷேசாத்திரி பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அவர்களின் மனுக்களில், மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. மனுக்கள் மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற நீதிபதி குமரப்பன், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

மீண்டும் விசாரணை நடைபெற்றபோது, மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெ. நிஷா பானு, எம். ஜோதிராமன் அமர்வு முன்னிலையில் நடைபெற்றது.

மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

அதேநேரம், குறிப்பிட்ட தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை வரும் ஜூன் 16 அன்று சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in