
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரு மூத்த அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (மே 8) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, தமிழக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட இலாகா மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகையால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
`அமைச்சர் துரைமுருகன் வசம் இருந்த கனிமவளத்துறை (கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்) அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை (சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்பு) அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், நீர்வளத்துறையுடன் சட்டத்துறையையும் அமைச்சர் துரைமுருகன் கூடுதலாக கவனிப்பார். அத்துடன் கனிமவளத்துறையை மட்டுமே கவனிப்பதால், இயற்கை வளத்துறை அமைச்சர் என்று இனி அமைச்சர் ரகுபதி அழைக்கப்படுவார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான காலகட்டமே உள்ள நிலையில், இரு மூத்த அமைச்சர்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இலாகா மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த 2006-2011 திமுக ஆட்சியின்போது துரைமுருகன் அமைச்சராக இருந்தார். 2009-ல் துரைமுருகனிடம் இருந்த பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டு, அதற்கு பதிலாக சட்டத்துறை வழங்கப்பட்டது.