பொன்முடி மீண்டும் எம்எல்ஏ: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

சட்டப்பேரவை உறுப்பினர் ஆவதன் மூலம் மீண்டும் அமைச்சராகவும் பொறுப்பேற்க வாய்ப்பு.
அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடிபடம்: எக்ஸ் தளம் | கே பொன்முடி எம்எல்ஏ

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதன் மூலம், அவர் மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, அமைச்சர் பொறுப்பிலிருந்து பொன்முடி நீக்கப்பட்டார். இவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இவர்களுடைய சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. சிறைத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதன் மூலம், பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகலாம் என்ற தகவல்கள் வெளியாகின. தீர்ப்பு குறித்த நகல் வந்தவுடன் இதுதொடர்புடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

இந்த நிலையில், பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினுடைய நகல் வெளியாகியுள்ளது. இதில் சிறைத் தண்டனை மட்டுமின்றி, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உத்தரவும் நிறுத்திவைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பினுடைய நகல் கிடைக்கப்பெற்றதையடுத்து, பொன்முடி சட்டப்பேரவை உறுப்பினராகத் தொடர்வார் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுவதாக அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினர் ஆனதைத் தொடர்ந்து, பொன்முடி மீண்டும் அமைச்சராகப் பதவியேற்பது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

வழக்கு விவரம்:

2006 - 2011 திமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக 2011-ல் அதிமுக ஆட்சியின்போது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.72 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை 2016-ல் விடுவித்தது.

2017-ல் லஞ்ச ஒழிப்புத் துறை இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கின் விசாரணையைக் கடந்த நவம்பர் 27-ல் நிறைவு செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை ஒத்திவைத்தார். டிசம்பர் 19-ல் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்தார். தொடர்ந்து, டிசம்பர் 21-ல் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 50 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in