தமிழக காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்!
திருநெல்வேலி, ராமநாதபுரம் காவல்துறை டிஐஜிக்கள் உள்ளிட்ட 10 ஐபிஎஸ் உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று (மார்ச் 25) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் ஐஏஎஸ் இன்று வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது,
ராமநாதபுரம் சரக டிஐஜியாகப் பணியாற்றி வந்த அபிநவ் குமார், மதுரை சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் திருநெல்வேலி சரக டிஐஜியாகப் பணியாற்றி வந்த பா. மூர்த்தி, ராமநாதபுரம் சரக டிஐஜியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக உள்ள சந்தோஷ் ஹதிமானிக்கு திருநெல்வேலி சரக டிஐஜி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை இணை ஆணையராக உள்ள ஆர். சக்திவேல், உளவுத்துறையின் பிரிவு 1-ன் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சென்னை கிழக்கு போக்குவரத்து இணை ஆணையராக உள்ள வி. பாஸ்கரன் வண்ணாரப்பேட்டை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல்துறையில், காவலர் நலப் பிரிவின் இணை ஆணையராக உள்ள மேகலினா இடென், சென்னை கிழக்கு போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் இணை ஆணையர் டி.என். ஹரி கிரண் பிரசாத் காவல்துறை நலப்பிரிவு இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கமாண்டோ சிறப்புப் படை எஸ்.பி.யாக உள்ள வி. கார்த்திக், மயிலாப்பூர் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜி. ஜவகர், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக திருப்பூர் மாநகர வடக்கு சரக சட்டம்-ஒழுங்கு இணை ஆணையராக உள்ள ஏ. சுஜாதா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்