
புதுக்கோட்டையில் உள்ள வடகாடு கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகாடு கிராமத்தில் முத்துராஜா சமூகத்தினருக்கும், தலித் சமூகத்தினருக்கும் இடையே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னையில் தலித் மக்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது என்றும், 5 பேருக்கு அரிவாள் வெட்டு, பேருந்து கண்ணாடிகள் உடைப்பு, காவல்துறையினர் 4 பேருக்கு காயம் மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலையில் வெட்டுக்காயம் என்று செய்தி பரவியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,
`புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், வடகாடு இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே நேற்று (மே 5) இரவு சுமார் 9.30 மணியளவில் முத்துராஜா சமூகத்தைச் சோந்த நபர்களுக்கும், தலித் சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்கும் இடையே யார் முதலில் பெட்ரோல் போடுவது என வாய்த் தகராறு ஏற்பட்டு, இருதரப்பினரும் பதிலுக்கு பதில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.
முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு இரு சக்கர வாகனங்களில், தலித் தரப்பினரை பின்தொடர்ந்து சென்று மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிகொண்டனர்.
இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கூரை வீடு எரிக்கப்பட்டும், அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டும் உள்ளதாக தெரியவருகிறது. மேற்படி சம்பவமானது குடிபோதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரியவருகிறது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இந்த மோதல் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், இவ்வாறு வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து வடகாடு வழியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், வடகாடு மற்றும் அதற்கு அருகே உள்ள கிராமங்களில் இருக்கும் 3 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த மோதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அமைச்சர் ரகுபதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.