
சென்னையில் நேற்று தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களில் ஒருவனான ஜாஃபர் குலாம் ஹூசைன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்.
சென்னையில் நேற்று காலை ஈஞ்சம்பாக்கம், அடையாறு, கிண்டி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் வைத்து இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், 6 மூதாட்டிகளிடம் அடுத்தது செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து விமானத்தில் தப்ப முயன்ற அவர்கள் இருவரையும் சென்னை மாநகர காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று (மார்ச் 26) காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் காவல் ஆணையர் அருண் கூறியதாவது,
`நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணி வரை 6 செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. ஏற்கனவே இதுபோல தாம்பரம் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதியில் செயின் பறிப்பு நடந்துள்ளதால், வெளி மாநில கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டுள்ள வாய்ப்புள்ளது என்று கணித்து விமான நிலையம், ரயில் நிலையங்கள், மெட்ரோ வாகன நிறுத்தங்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்யக் கூறினோம்.
சிசிடிவி காட்சிகளைப் பார்த்ததில் குற்றவாளிகளின் அடையாளங்கள் தெரிந்தன. அதை வைத்து சென்னை விமானநிலையத்தில் இருவரை கைது செய்தோம். அவர்கள் கொடுத்த தகவலை வைத்து மற்றுமொரு குற்றவாளியை பிடித்தோம். பொதுமக்கள் அவர்களிடம் பறிகொடுத்த அத்தனை நகைகளையும் மீட்டிருக்கிறோம்.
நகை பறிப்பில் சம்மந்தப்பட்டுள்ள 3 பேரும் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த இரானி கொள்ளையர்கள். குற்றச் செயலில் உபயோகப்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை மீட்க, குற்றவாளி ஒருவனை அழைத்துச் சென்றபோது, காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்தான். அப்போது என்கவுன்ட்டர் நடைபெற்றது. அவனது வண்டியில் துப்பாக்கி இருந்தது.
இதுவரை கிடைத்த தகவல்கள்படி, இது ஒரு பெரிய கும்பல். பிடிபட்ட கொள்ளையர்கள் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மக்களின் கவனத்தை திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபடுவதே இரானி கொள்ளை. இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் நபர்களுக்குத் தொடர்பு இல்லை. குற்றம் நடந்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்களைக் கைதுசெய்துள்ளோம்’ என்றார்.