
பிரதமர் நரேந்திர மோடி ஒரு போராளி; அவரால் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
வேவ்ஸ் உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு மாநாட்டை மஹாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையில் இன்று (மே 1) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், சிரஞ்சீவி, அக்ஷய்குமார், ஹேமமாலினி ஆகியோருடன், தொழில்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் ரஜினி பேசியதாவது,
`பஹல்காமில் காட்டுமிராண்டித்தனமான மற்றும் இரக்கமற்ற முறையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனால் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க இந்த நான்கு நாள் பொழுதுபோக்கு நிகழ்வை அரசு ஒத்திவைக்கக்கூடும் என்று பலரும் கூறினார்கள். ஆனால் இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன்.
ஏனென்றால் என்னுடைய பிரதமர் மோடிஜி மீது நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அவர் ஒரு போராளி; எந்த சவாலையும் அவரால் எதிர்கொள்ள முடியும். இதையும் அவர் துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஜம்மு-காஷ்மீரில் நிலையான அமைதியைக் கொண்டுவருவார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியளிக்கிறது. பொழுதுபோக்கு ஊடகத்தை உலகளாவிய முறையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட இந்த முயற்சிக்காக மனதாரப் பாராட்டுகிறேன். இதற்கு என்னுடைய முழு ஆதரவை தெரிவிக்க விரும்புகிறேன்’ என்றார்.