
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில், நேற்று (ஜூலை 8) பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த ரயில் கேட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கேட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்டை நேற்று (ஜூலை 8) காலை 7.30 மணி அளவில் கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது. இதில், பள்ளி வேன் 50 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு கடுமையாக சேதமடைந்தது.
பள்ளி வேனில் இருந்த மாணவர்கள் நிமிலேஷ் (12), சாருமதி (16), செழியன்(15) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். நிமிலேஷின் அண்ணன் விஷ்வேஸ் (16) மற்றும் வேன் ஓட்டுநர் சங்கர் (47) ஆகியோர் படுகாயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தின்போது பணியில் இருந்த கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மாவின் அலட்சியப்போக்கு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அவருக்குத் தமிழ் தெரியாததால் தமிழ் தெரிந்த கேட் கீப்பரை பணியில் அமர்த்தக் கோரியும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்தனர்.
பயணியர் ரயில் வந்த நேரத்தில், செம்மங்குப்பம் கேட் மூடப்படாமல் திறந்து இருந்ததாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேன் ஓட்டுநர் சங்கர் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.
காவல்துறையினரால் கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா கைது செய்யப்பட்ட நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பணி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், செம்மங்குப்பம் ரயில்வே கேட்டின் புதிய கேட் கீப்பராக தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் பணியமர்த்தப்பட்டுள்ளார். ரயில்வே விதிகளை முறையாகப் பின்பற்றவேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தனக்கு அறிவுறுத்தியாக புதிய தலைமுறை ஊடகத்திற்கு ஆனந்தராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.