பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா திருச்சியில் மேற்கொள்ளவிருந்த வாகனப் பேரணிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தேசியக் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து பிரசாரம் செய்யவுள்ளார்கள்.
இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா திருச்சியில் காந்தி மார்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகனப் பேரணி மேற்கொள்ளத் திட்டமிருந்தார். எனினும், வாகன நெரிசல் ஏற்படும் எனக் கூறி பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. மேலும், பேரணிக்கு வேறு பாதையைத் தேர்வு செய்யுமாறும் காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது.
இதைத் தொடர்ந்து ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது. திருச்சி கண்ணப்பன் உணவகத்தில் இருந்து இஎஸ்ஐ வரை 1.5 கி.மீ தூரத்திற்கு வாகன பேரணியை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை வாகன பேரணியை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் கோவையில் வாகனப் பேரணி மேற்கொண்டார். இதற்கும் ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றவுடன் பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நடைபெற்றது.