கோவையில் நாளை நடைபெறவிருந்த 'அண்ணாமலை எனும் திருப்புமுனை' நூல் வெளியீட்டு விழாவுக்கும் அரசியல் சார்ந்த ஒரு நிகழ்வுக்கும் காவல்துறையின் ஆட்சேபனையின் பேரில் தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்துள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையின் அரசியல் பயணம், அண்ணாமலை எனும் திருப்புமுனை என்கிற பெயரில் தமிழிலும் The Idea called Malai என்கிற பெயரில் ஆங்கிலத்திலும் முறையே கிழக்கு மற்றும் ஆக்சிஜன் புக்ஸ் ஆகிய பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நூலின் விலை ரூ. 250. நூலாசிரியர் சுரேஷ் குமார், இதற்கு முன்பு மூன்று நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
இந்நூல் வெளியீட்டு விழா, நாளை (ஏப்ரல் 06) கோவையில் நடைபெறுவதாக இருந்தது. கோவை உப்பிலிபாளையம் ஸ்ரீசாய் விவாஹா மஹாலில் மாலை 4 முதல் இரவு 7 மணி வரை அண்ணாமலையின் தலைமையில் பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, அறிவியலாளர் முரளி, பிரபல செஸ் பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ் மற்றும் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றும் Professionals in Politics என்கிற நிகழ்வில் அண்ணாமலை நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஸ்மார்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
எனினும் இந்நிகழ்ச்சிக்கு காவல்துறையின் ஆட்சேபனையின் பேரில் தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சிக்காக அனுமதி கோரப்பட்ட நிலையில், இது அரசியல் சார்ந்த நிகழ்ச்சி என்பதால் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சட்டம் ஒழுங்குப் பிரச்னைக்கு இந்நிகழ்ச்சி வழிவகுக்கும் என்று சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்திய வட்டமேஜை விவாதம் என்கிற அரசியல் சார்ந்த நிகழ்ச்சியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு, சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்ட இருந்ததாகவும் இக்காரணங்களால் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து உத்தரவிடப்படுகிறது என்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் தெரிவித்து ஸ்மார்ட் நிறுவனத்துக்கு அனுமதி மறுப்புக் கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து இந்நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரி, நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
-