பெற்றோர் எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்று கூறி, பிள்ளைகளை அதே வகுப்பில் தக்க வைக்க கையெழுத்துக்கேட்டால், பெற்றோர் அதில் கையெழுத்திடக்கூடாது.
பெற்றோர் எதிர்த்துக் குரல் கொடுக்கவேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
1 min read

`5 மற்றும் 8-ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுக்கும் சிபிஎஸ்இ மாணவர்களை அதே வகுப்பில் தக்க வைக்கும் (ஃபெயில்) நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்கவேண்டும்’ என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் இன்று (மே 2) செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது,

`சிபிஎஸ்சி பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களை மீண்டும் அதே வகுப்புகளில் படிக்க வைக்க வழிவகை செய்யும் தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ஷரத்து, இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படவிருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது.

இதனால்தான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறார். தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையாக இருந்தபோதே எதிர்த்தோம். கொரோனா காலத்தில் அவசர அவசரமாக அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, இன்று படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தொடக்க கல்வியைப் பொறுத்தவரை நம் மாநிலத்தில் இடைநிற்றல் என்பதே கிடையாது. கடனை வாங்கி சிபிஎஸ்சி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர் இதனால் அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.

கல்வி உரிமை சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் அனைவரையும் தேர்ச்சி பெறவைத்து, 9-ம் வகுப்பில் இருந்து மதிப்பீடு செய்து வருவதால்தான் இடைநிற்றல் என்பது இல்லை. இதை செய்யவில்லை என்றால் பள்ளிக்கல்வியில் இருந்து பிள்ளைகள் வெளியேறிவிடுவார்கள். கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசுப் பள்ளிக் குழந்தைகளை நாம் பாதுகாத்துவிட்டோம்.

இதே மாநிலத்தைச் சேர்ந்த சிபிஎஸ்சி மாணவர்களுக்கு அந்த சட்டத்தில் மாற்றம்கொண்டுவரப்பட்டு இது செயல்படுத்தப்படவுள்ளது. இதனால் இடைநிற்றல் அதிகரிக்கும். இதை எதிர்த்து பெற்றோர்கள் குரல் எழுப்ப வேண்டும், கேள்வி எழுப்பவேண்டும். இதை நாங்கள் கட்சிக்காக கேட்கவில்லை, கல்வி அமைப்புக்காக கேட்கிறோம்.

தேர்வில் தேர்ச்சியடையவில்லை என்று கூறி, பிள்ளைகளை அதே வகுப்பில் தக்க வைக்க பெற்றோரிடம் கையெழுத்துக்கேட்டால், அதை எதிர்த்துக் கேள்வி கேட்கவேண்டும், அதில் கையெழுத்திடக்கூடாது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in