
தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பொது வாழ்க்கைகும், தங்கள் குடும்பத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று பிரபல லாட்டரி அதிபர் மார்டினின் மகளும், ஆதவ் அர்ஜுனாவின் மனைவியுமான டெய்சி மார்டின் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டெய்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் நேற்று (பிப்.28) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,
`எங்களின் தனிப்பட்ட வாழ்வையும், தொழிலையும் தனித்தனியாக வைத்திருக்கவே நானும், ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் விரும்புவோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அனைத்து தொழில்ரீதியான மற்றும் அரசீயல்ரீதியான முடிவுகளும், நடவடிக்கைகளும் சுதந்திரமாக எடுக்கப்படுகின்றன.
எங்கள் குடும்பத்திற்கும் அவற்றுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. எங்கள் இருவரது வாழ்க்கையிலும், ஒருவருக்கொருவர் தலையிட்டுக் கொள்வதாகப் பரப்பப்படும் அனைத்துவிதமான யூகங்கள், வதந்திகள், தவறான தகவல்கள் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.
எங்கள் இருவரின் தொழில்களும் வெவ்வேறானவை, நாங்கள் இருவரும் தனித்துவமான கருத்துகளைக் கொண்டுள்ளோம். எங்களின் தனியுரிமையையும், கருத்துகளையும் நாங்கள் ஒருவருக்கொருவர் மதிக்கிறோம். இது தொடர்பாக பிறர் தவறான கருத்துக்களைப் பரப்புவதை எதிர்க்கிறோம்.
எங்கள் குடும்பத்தை, எங்கள் இருவரின் தொழில் மற்றும் பொது வாழ்க்கையில் சிக்க வைப்பதை, எங்களின் பரஸ்பர நலனுக்காக தவிர்க்குமாறு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகளை மரியாதையுடன் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்.