
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தபோது, ரூ. 2.1 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஐ. பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் ஐ.பி. செந்தில்குமார், ஐ.பி. பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2012-ல் வழக்குப்பதிவு செய்தது.
திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், கடந்த 2018-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இன்று (ஏப்.28) விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத்துறையால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லாததாலும், சொத்துகள் முறையாக கணக்கீடு செய்யப்படாமலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், வழக்கிலிருந்து விடுவித்த திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யக்கோரி வாதிட்டார்.
விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி, முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை முன்வைத்து லஞ்ச ஒழிப்பு தரப்பில் வாதிடப்பட்டது. வாதங்கள் நிறைவடைந்த பிறகு தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது மனைவி, மகன்களை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுபதிவு செய்து, விசாரணையை தினமும் நடத்தி ஆறு மாதத்தில் முடிக்கவேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.