சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002-ல் வழக்கு தொடரப்பட்டது.
சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்
ANI
1 min read

சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்.23) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி வகித்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 3. 92 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கடந்த 2002-ல் வழக்கு தொடரப்பட்டது.

வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள், சகோதரர் ஆகியோர் மீது தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து கடந்த 2007-ல் வேலூர் நீதிமன்றம் 2007-ல் உத்தரவிட்டது.

2011-ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்ததும், விடுவிப்பு உத்தரவை எதிர்த்து 2013-ல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி வேல்முருகன் மேற்கொண்டார். லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரனும், துரைமுருகன் சார்பில் வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா, பி. வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.

வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனுவை ஏற்றுகொள்வதாக அறிவித்த நீதிபதி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, சாட்சிகளிடம் விசாரணையைத் தொடங்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in