முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் 2-வது முறையாகச் சந்திப்பு! | O Panneerselvam

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசல் வரை வந்து வரவேற்றுச் சென்றார்.
முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் 2-வது முறையாகச் சந்திப்பு! | O Panneerselvam
@OfficeOfOPS
2 min read

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஒரேநாளில் இரண்டாவது முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் மூன்று மணி நேரம் நடைபெற்றது. இதனிடையே, இன்று காலை சென்னை அடையாறில் உள்ள பிரம்ம ஞானசபையில் நடைப்பயிற்சியின்போது முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார் ஓ. பன்னீர்செல்வம். இதன் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகின.

தொடர்ந்து நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூட்டத்துக்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் செய்தியாளர்களிடம் விளக்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

மூன்று தீர்மானங்கள்

"இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெற்றிருந்தது. ஆனால், இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது என்பது ஒரு தீர்மானம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது.

தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் தலைவர், கழக இணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எந்தக் கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை. எதிர்காலத்தில் நிலைமைகளுக்கு ஏற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

முதல்வரைச் சந்தித்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், "நான் சென்னையில் இருக்கும்போது பிரம்ம ஞானசபையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். நான் நடைப்பயிற்சியில் இருக்கும்போது, அவரும் நடைப்பயிற்சியில் இருந்தார். இருவரும் வணக்கம் சொல்லிவிட்டுச் சென்றோம்" என்று பதிலளித்தார்.

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்புக்கு மத்தியில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "யாரை வீழ்த்த வேண்டும் என்பது எங்களது குறிக்கோள் அல்ல. யாரையெல்லாம் வாழ்த்த வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள்" என்று கூறியது கவனம் பெற்றது.

முதல்வரிடம் காலை பேசியது என்ன?

இந்நிலையில் தான் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்றுள்ளார் ஓ. பன்னீர்செல்வம். ஓ. பன்னீர்செல்வத்துடன் ஓ.பி. ரவீந்திரநாத் மற்றும் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் உடன் சென்றுள்ளார்கள். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசல் வரை வந்து ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்றுச் சென்றார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது, அவரைச் சந்திக்க அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஓ. பன்னீர்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பயணிக்கலாம் எனப் பேச்சுகள் எழத் தொடங்கின. இதனிடையே, கடந்த ஜூலை 29 அன்று சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்குரிய ரூ. 2,151 கோடியை மத்திய அரசு விடுவிக்காததைக் கண்டித்து ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டார்.

O Panneerselvam | MK Stalin | ADMK | DMK

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in