நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலை: அண்ணாமலை குற்றச்சாட்டு

"தனிப்பட்ட முறையில் சம்பந்தம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறிய பிறகு எதிர்க்கட்சி நண்பர்கள் இதை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள்"
அண்ணாமலை (கோப்புப்படம்)
அண்ணாமலை (கோப்புப்படம்)

ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் பிரச்னை இல்லை என கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு திருநெல்வேலி நோக்கி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நிறைய பணம் எடுத்துச் செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பேர் உரிய ஆவணங்களின்றி ஏறத்தாழ ரூ. 4 கோடியை ரொக்கமாக எடுத்துச் சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று பேரில் இருவர் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

ரூ. 3.99 கோடி ரொக்கப் பணத்தை நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு சென்றதாக இவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள் எனத் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டார்கள்.

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நயினார் நாகேந்திரன் நேற்று காலை விளக்கமளித்தார்.

இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். நயினார் நாகேந்திரன் விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, சதி வேலையில் அவருடைய பெயர் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறினார்.

"தாம்பரத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். ஒரு சதி வலையில் நயினார் நாகேந்திரனின் பெயர் சொல்லப்பட்டுள்ளது. தனக்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறிய பிறகு, இதுகுறித்துப் பேசுவதற்கு எதுவும் இல்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் என யார் வேண்டுமானாலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கட்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் பிரச்னை இல்லை.

தனிப்பட்ட முறையில் சம்பந்தம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறிய பிறகு எதிர்க்கட்சி நண்பர்கள் இதை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள்" என்றார் அண்ணாமலை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in