
தமிழக ஆழ்கடல் பகுதிகளில் 4 இடங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஏலத்தின் 9-வது சுற்று கடந்தாண்டு ஜனவரியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆழ்கடல் பகுதிகளில் 4 இடங்கள் உள்பட நாடு முழுக்க 28 இடங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஏலத்தில் விடப்பட்டன. கன்னியாகுமரி அருகே 3 இடங்களிலும் சென்னை அருகே ஒரு இடத்திலும் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஏலத்தில் விடப்பட்டிருந்தன.
வேதாந்தா நிறுவனத்துடனான போட்டியில் இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது ஓஎன்ஜிசி. கன்னியாகுமரி மற்றும் சென்னை அருகே ஆழ்கடலில் 32,485 சதுர கி.மீ. அளவில் இதற்கானப் பணியை மேற்கொள்ள ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு திட்டத்துக்கு மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இருந்தபோதிலும், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.