தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழாசிரியர்கள் எண்ணிக்கை பூஜ்யம்: மத்திய அரசு

21 பள்ளிகளில் தமிழ் மொழியைப் பயிற்றுவிப்பதற்காக, தமிழக அரசின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான தமிழ் விர்சுவல் அகாடமி வழியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர தமிழாசிரியர்கள் எண்ணிக்கை பூஜ்யம்: மத்திய அரசு
1 min read

தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள நிரந்தர தமிழாசிரியர்கள் எண்ணிக்கை குறித்து திமுக மக்களவை எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளது மத்திய அரசு.

தமிழகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள தமிழ், ஹிந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்தும், மும்மொழிக்கொள்கையின் கீழ் மாநில வாரியாக கற்பிக்கப்படும் மொழிகள் குறித்தும், அதைப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும், மத்திய கல்வி அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார் மக்களவை திமுக எம்.பி. கனிமொழி.

இந்நிலையில், அவரது கேள்விக்கு இன்று (மார்ச் 24) எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார் மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி.

அதில், தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் நிரந்தரமாக 86 ஹிந்தி மற்றும் 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் இருப்பதாகவும், ஒரு நிரந்தர தமிழாசிரியரும் இல்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் 24 தமிழாசிரியர்கள் இருப்பதாகவும் பதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 21 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைப் பயிற்றுவிப்பதற்காக, தமிழக அரசின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான தமிழ் விர்சுவல் அகாடமி வழியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவில் ஒரு மொழிப் பாடத்தை மட்டும் 1,49,065 பள்ளிகள் பயிற்றுவிப்பதாகவும், இரு மொழிப் பாடங்களை 4,16,601 பள்ளிகள் பயிற்றுவிப்பதாகவும், மூன்று மொழிப் பாடங்களை 9,06,225 பள்ளிகள் பயிற்றுவிப்பதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in