தேசியக் கட்சியுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி

"மேக்கேதாட்டு விஷயத்தில், எனது கருத்தை அறிக்கையின் வாயிலாகத் தெளிவாக தெரிவித்துவிட்டேன்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்காது என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.

அப்போது சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சியுடன் அதிமுக கூட்டணி இல்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு கட்சிகள் வரும்போது தகவல் தெரிவிக்கப்படும். எங்களுடைய கூட்டணி சிறப்பான கூட்டணியாக அமையும். கூட்டணி அமைந்த பிறகு அனைவரையும் அழைத்து செய்தி வெளியிடுவோம். மேக்கேதாட்டு விஷயத்தில், எனது கருத்தை அறிக்கையின் வாயிலாகத் தெளிவாக தெரிவித்துவிட்டேன்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன. பாமக, தேமுதிக கட்சிகள் கூட்டணி குறித்து இன்னும் உறுதியான முடிவை அறிவிக்கவில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி வைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கெனவே உறுதிபடக் கூறியது. இதன் காரணமாக அதிமுக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்கிற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேசியக் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பதை எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in