
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
2025-26 தமிழக பட்ஜெட்டின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் தற்போது தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்.24) பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றைய கேள்வி நேரம் நிறைவுபெற்ற பிறகு, சட்டப்பேரவை விதி எண் 55-ன் கீழ் அவசர முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய கூட்டணிக் கட்சிகளின் சட்டப்பேரவைக்குழுத் தலைவர்களும், பாமக சட்டப்பேரவைத் தலைவர் ஜி.கே. மணியும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகத்தை நிறுவ தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
இறுதியாக தீர்மானத்திற்குப் பதிலுரை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
`சட்டப்பேரவை உறுப்பினர்கள், அவை முன்னவர், சட்டப்பேரவைத் தலைவர் எனப் பலரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி, முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரால் ஒரு பல்கலைக்கழக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்று சட்டப்பேரவை விதி எண் 55-ன் கீழ் தங்களது கருத்துக்களை எடுத்துச் சொன்னார்கள்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை வளர்ந்து, மேலோங்கி மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக, உலகளவில் இன்று பாராட்டக்கூடிய அளவுக்கு உள்ளன.
அவ்வளவு ஏன், நம் நாட்டில் முதல் இடத்தில் இருக்கக்கூடிய கல்வி நிலையங்கள் அனைத்தும் உருவாகக் காரணமாக பல்வேறு தலைவர்கள் இருந்தாலும் அவர்களில், கலைஞர் முக்கியமானவர். கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டு பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளார்.
அனைவரும் குறிப்பிட்டதைப் போல பல்கலைக்கழகங்களின் பல்கலைக்கழகமாக விளங்கிக்கொண்டிருக்கும் கலைஞருக்கு அவர் பிறந்த ஒருகிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்தில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். இதை எந்தவிதமான தயக்கமும் இன்றி அறிவிக்கிறேன்’ என்றார்.