கட்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த விவகாரத்தில் ஆர்டிஐ தகவல் மூலம் வெளியான செய்தியைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸை விமர்சித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சத்தீவு விவகாரம் குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கோரியிருந்தார். இந்திரா காந்தி அரசு கட்சத்தீவை இலங்கைக்கு எப்படி விட்டுக்கொடுத்தது என்பது ஆர்டிஐ பதில் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக் காட்டி பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"காங்கிரஸ் கட்சி இரக்கமில்லாமல் கட்சத்தீவை எப்படி விட்டுக்கொடுத்தது என்பது புதிய உண்மைத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபமடையச் செய்துள்ளது. காங்கிரஸை நம்ப முடியாது என்கிற எண்ணம் மக்கள் மனதில் மீண்டும் உறுதியாகியுள்ளது.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை வலுவிழக்கச் செய்வதே 75 ஆண்டுகாலமாக செயலாற்றி வரும் காங்கிரஸின் பாணி. இதுவே இன்னும் தொடர்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.