
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும், என சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு,
நேற்று (நவ.8) தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காலையும் அதே பகுதியில் நிலவுகிறது. இதனால், அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கு அடுத்த 2 தினங்களில், தமிழக-இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
மேலும், நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிக்கு மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று தெற்கு அரபிக்கடலில் நிலவுகிறது. இதனால் இன்று (நவ.9) தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று தொடங்கும் மழையானது, வரும் நவ.15 வரை தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெய்யும்.
அடுத்த 48 மணிநேரத்தில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.