சென்னையில் உறைவிட வசதியுடன் புதிய போட்டித்தேர்வு பயிற்சி மையம்: முதல்வர் ஸ்டாலின்

யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சிபெற்ற 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று பலனடைந்தவர்கள்.
சென்னையில் உறைவிட வசதியுடன் புதிய போட்டித்தேர்வு பயிற்சி மையம்: முதல்வர் ஸ்டாலின்
ANI
1 min read

சென்னை செனாய் நகரில் உறைவிட வசதியுடன் கூடிய புதிய போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஏப்.24) நடைபெற்றது. இதில் பங்கேற்ற வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. வெற்றிஅழகன், நான் முதல்வன் திட்டம் தொடர்பாக விவரித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பலனடைந்த யுபிஎஸ்சி மாணவர்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,

`தமிழ்நாட்டு மாணவர்களின் திறனை வளர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன் உருவான திட்டம்தான் நான் முதல்வன். அந்த திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விழைவாகவே தற்போது வெளியான குடிமைப்பணித் தேர்வு முடிவுகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

2016 வரை, ஒவ்வொரு ஆண்டும் அதிகமான தமிழ்நாட்டு மாணவர்கள் குடிமைப்பணித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை மாறி 2021-ல் வெறும் 27 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதை கவனத்தில் வைத்து நான் முதல்வர் திட்டத்தின் கீழ் பல்வேறு முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டது.

குடிமைப்பணித் தேர்வுக்கு தயாராகக்கூடிய ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ரூ. 7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கினோம். மேலும் முதன்மைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ரொக்கமாக ரூ. 25,000 ஊக்கத்தொகையாக வழங்கினோம். அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு மையத்தின் மூலம் இந்த மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

நான் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளின் பயனாக இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 57 மாணவர்கள் பல்வேறு அகில இந்தியப் பணிகளுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று பலனடைந்துள்ளனர். நான் முதல்வர் திட்டத்தின் போற்றத்தக்க இந்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டும்.

அது மட்டுமல்லாமல், தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தவேண்டும். அதற்காக சென்னை செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில் அனைத்து நவீன வசதிகளும் கூடிய பயிற்சி மையம் ரூ. 40 கோடி செலவில் அமைக்கப்படும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in