
கடன் வழங்கும் நிறுவனங்கள், வலுக்கட்டாயமாக கடனைத் திருப்பி வசூலிப்பதைத் தடுக்க வழிவகை செய்யும் புதிய சட்ட திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.26) தாக்கல் செய்யப்பட்டது.
நடப்பாண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தனி நபர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் போன்றோருக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள், வாங்கிய கடனை வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வழிவகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
கடன் வழங்கும் நிறுவனங்கள் அதனை வசூலிக்க முறையற்ற வழிகளை நாடுவதாகவும், இதனால் பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் இந்த புதிய சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படுவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சட்ட திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
1) கடனை வலுக்கட்டயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஜாமினில் வெளியே வரமுடியாது.
2) வலுக்கட்டாயமான கடன் வசூலிப்பு நடவடிக்கையால், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால், கடனை வழங்கிய நிறுவனம் தற்கொலைக்குத் தூண்டியதாக கருதப்படும்.
3) கடன் பெற்றவரையோ, அவரது குடும்பத்தினரையோ கடன் வழங்கிய நிறுவனங்கள் மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களின் சொத்துக்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது.
4) கடன் பெறுவோருக்கும், கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கும்.