ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்

முன்னதாக, சம்மனை ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்
சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜர்@NainarBJP

ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கில் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் மாநில பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆஜராகி உள்ளார்.

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மார்ச் 6 அன்று புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நிறைய பணம் எடுத்துச் செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பேர் உரிய ஆவணங்களின்றி ஏறத்தாழ ரூ. 4 கோடியை ரொக்கமாக எடுத்துச் சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று பேரில் இருவர் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது தெரியவந்தது.

இதன் பிறகு தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நயினார் நாகேந்திரன் விளக்கமளித்திருந்தார். பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் என்றும் வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இது தொடர்பாக நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல் துறை சம்மன் அனுப்பியது. இதனிடையே நயினார் நாகேந்திரன், “இதை அரசியல் சூழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன். முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர்” என்றார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தாம்பரம் காவல் துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. நயினார் நாகேந்திரன் தொடர்பான வழக்கு ஆவணங்களை தாம்பரம் காவல் துறையினர், சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். இதன் பிறகு நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரயிலில் பணத்துடன் கைதானவர்கள் நயினார் நாகேந்திரன் பரிந்துரையின் பேரில், எம்எல்ஏவுக்கான எமர்ஜென்சி கோட்டா பயணச்சீட்டில் ரயிலில் பயணித்தது தெரியவந்தது. இது நயினார் நாகேந்திரனுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன், பாஜகவைச் சேர்ந்த கேசவ விநாயகம், கோவர்தன் மற்றும் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் வரும் 31 அன்று சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.

இதன் பிறகு சம்மனை ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறி இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், கேசவ விநாயகம் காவல் துறை விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in