
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோர், கட்சி அலுவலகமான கமலாலயத்தில் இன்று (ஏப்.11) பிற்பகல் 2 மணி முதல் விருப்ப மனுவைப் பெற்றுக்கொண்டு, மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட மனுவை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக புதிய தலைமுறை செய்தியாளரிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,
`பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்யவுள்ளேன். பிற்பகல் 2.40 மணிக்கு விருப்ப மனு தாக்கல் செய்கிறேன்’ என்றார்.
இதைத் தொடர்ந்து, பிற்பகல் 2.55 மணி அளவில் மேலிடத் தேர்தல் பார்வையாளரிடம் விருப்ப மனுவைத் தாக்கல் செய்தார் நயினார் நாகேந்திரன்.
அப்போது, தமிழக பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, எல். முருகன், வானதி சீனிவாசன், தற்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தார்கள்.
நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதால், தலைவர் பதவிக்கு அவர் ஒருமனதாகத் தேர்தெடுக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.