முதல்வர் கண்ணில் பயம், பதற்றம் வேண்டாம்: நயினார் நாகேந்திரன்

"இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்!"
முதல்வர் கண்ணில் பயம், பதற்றம் வேண்டாம்: நயினார் நாகேந்திரன்
படம்: https://x.com/NainarBJP
1 min read

பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து முதன்முறையாகப் பதிவிட்டுள்ளார்.

மிழக பாஜக தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்குப் போட்டியிடுவோர் நேற்று (ஏப்.11) மாநிலத் தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, மாநிலத் தலைவர் பதவிக்காக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு வழங்கினார். இதனால் தலைவர் பதவிக்கு அவர் போட்டியின்றித் தேர்தெடுக்கப்படுவது உறுதியானது.

இந்நிலையில், சென்னை வானகரத்தில் நேற்று (ஏப்.12) மாலை நடைபெற்ற விழாவில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, முதன்முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுகவை விமர்சித்து எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

"நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்! ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்! ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது!

இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது!

முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது! இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும்! பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே!

இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது!" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in