
தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
தமிழக பாஜக தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்குப் போட்டியிடுவோர் நேற்று (ஏப்.11) மாநிலத் தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, மாநிலத் தலைவர் பதவிக்காக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு வழங்கினார். இதனால் தலைவர் பதவிக்கு அவர் போட்டியின்றித் தேர்தெடுக்கப்படுவது உறுதியானது.
இந்நிலையில், சென்னை வானகரத்தில் இன்று (ஏப்.12) மாலை நடைபெற்ற விழாவில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழிசை சௌந்தரராஜன், நாராயணன் திருப்பதி, கார்த்தியாயினி, கே.பி. ராமலிங்கம், வானதி ஸ்ரீனிவாசன், எல். முருகன், அண்ணாமலை, கராத்தே தியாகராஜன், வினோஜ் செல்வம், பால் கனகராஜ், எஸ்.ஜி. சூர்யா, எம். முருகானந்தம், ஹெச். ராஜா, ராம. சீனிவாசன், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா, ஆர். சரத்குமார், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி அறிவித்தார்.
இந்த விழாவில், பாஜக பொதுச்செயலாளர் தருண் சுக், தமிழக பாஜகவிற்கான மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மத்திய சுரங்க அமைச்சர் கிஷண் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல். முருகன், மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தார்கள்.