.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
`திராவிட மாடல் ஆட்சியில் 1400-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன' என்று சென்னை கொளத்தூரில் நடந்த விழாவில் பேசியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசிய உரையின் சுருக்கம் பின்வருமாறு:
`தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளும் என் தொகுதிகள்தான். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக்கட்சிகளின் தொகுதிகளை ஒரே கண்ணோட்டத்தோடுதான் பார்க்கிறேன். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளுக்குத் தேவையான முதன்மையான 10 திட்டங்களின் பட்டியலைக் கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன்.
பட்டியல் கிடைத்ததும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே இதைப் போன்ற திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. நம் திராவிட மாடல் ஆட்சியில்தான் எந்த விருப்பு, வெறுப்பும் இன்றி எதிர்க்கட்சியினரின் தொகுதிகளிலும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இந்த ஆட்சி எங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், ஓட்டுப் போடத் தவறிய மக்களுக்கும் சேர்த்துதான் நடைபெறுகிறது. எங்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும், ஓட்டுப் போடாதவர்கள் இந்த ஆட்சிக்கு ஓட்டுப் போடாமல் விட்டுவிட்டோம் என்று வருத்தப்படும் அளவுக்கு எங்கள் ஆட்சி இருக்கிறது.
தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏராளமானத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியில் 1400-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்களை மீட்டுள்ளோம். கோவில்கள் சார்பில் 10 கல்லூரிகளை உருவாக்கியுள்ளோம். தமிழக அறநிலையத்துறை இறைபணியுடன் கல்விப்பணியையும் செய்கிறது.
ஒருவரின் கல்விக்கு எதுவுமே தடையாக இருக்கக்கூடாது. படிப்பு மட்டுமே மாணவர்களின் கவனத்தில் இருக்க வேண்டும். அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதே போல மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை ஆகஸ்ட் 9-ல் கோவையில் தொடங்கி வைக்கிறேன்’.