பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை?
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 9-ல் தமிழ்நாடு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுக்க 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் மோடி ஏப்ரல் 9-ல் தமிழ்நாடு வரவுள்ளதாகவும், அப்போது சென்னையில் சாலை பேரணி நடத்த பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்த வருடம் 6 முறை தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார் மோடி. கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டு முறை தமிழகம் வந்தார். இதைத் தொடர்ந்து 3-வது முறையாக இரண்டு நாள் பயணமாக பிப். 27 மற்றும் பிப். 28 ஆகிய நாள்களில் முறையே பல்லடம் மற்றும் நெல்லையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இதன் பிறகு மார்ச் 4 அன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். மார்ச் 15 அன்று கன்னியாகுமரிக்கு சென்றார். இதைத் தொடர்ந்து மார்ச் 18 அன்று கோவையில் சாலை பேரணியில் மோடி கலந்துக் கொண்டார். இதன் பிறகு மார்ச் 19 அன்று சேலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில், மோடி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வரவுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.