

பிஹார் தேர்தலில் அனைவருக்குமான பாடம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிஹார் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று (நவ. 14) வெளியாகின. அதில், பாஜக - ஜேடியு இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்கு நேர்மாறாக ஆர்ஜேடி - காங்கிரஸ் இணைந்த இண்டியா (மகாகட்பந்தன்) கூட்டணி குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணியில் திமுக இருப்பதால் நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பிஹார் தேர்தல் முடிவுகள் பற்றிய கேள்வி கேட்கப்பட்டபோது முடிவுகள் முழுமையாக வந்த பிறகு கருத்து தெரிவிப்பதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், பிஜார் தேர்தலில் அனைவருக்குமான பாடம் என்று தொடங்கி, தனது கருத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
“மூத்த தலைவர் நிதீஷ் குமாரின் உறுதியான வெற்றிக்குப் பாராட்டு. பிஹார் மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்ற வேண்டும் என்று அவரை வாழ்த்துகிறேன். அதேபோல் அயராத பிரசாரங்களுக்காக இளம் தலைவரான தேஜஸ்வி யாதவையும் பாராட்டுகிறேன்.
பிஹார் தேர்தலின் முடிவுகள் மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட உதவிகள், சமூகம் மற்றும் கொள்கை அடிப்படையிலான கூட்டணிகள், தெளிவான அரசியல் கருத்துகள் மற்றும் அர்ப்பணிப்பான நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையில் வந்துள்ளன. இத்தகைய புதிய சவால்கள் தரும் செய்திகளை உற்றறிந்து, இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய உத்திகளைத் திட்டமிடும் அளவு இண்டியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் முதிர்ந்த அரசியல்வாதிகளாக உள்ளார்கள்.
பிஹார் தேர்தலின் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் பொறுப்பற்ற, தவறான நடத்தைகளை மறைத்துவிடாது. தேர்தல் ஆணையத்தின் மீதான நற்பெயர் மிகவும் குறைந்திருக்கிறது. நம் நாட்டின் குடிமக்களுக்கு பாரபட்சமற்ற, வலுவான தேர்தல் ஆணையமே தேவை. அவர்கள் தேர்தல் நடத்தும் முறைகள் வெற்றிபெறாதவர்களுக்கும் ஊக்கத்தைத் தரும் வகையில் அமைய வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
Chief Minister M.K. Stalin has posted his statement saying that the Bihar election holds a lesson for everyone.